articles

img

வலம் கல்பகோடி காலம் நன்னாருப்பே

“மாமா! அபிவாதயே சொல்லி சேவிச்சிக்கிறேன்! ஆசீர்வாதம் பண்ணுங்கோ”

  “அப்படியே சிலிக்குதுடா அம்பீ! ஏந்துரு.. ஏந்துரு! கல்பகோடி காலம் நன்னாருப்பே! யாருன்னு மனசுக்கு தட்டுப்படலியேடா! வயசாச்சோல்லியோ” “கும்மாணம் மேட்டுத்தெரு மாமா.. நாணாவோடப்பையன்! பேர் சொன்னா தெரிஞ்சிக்கற அளவுக்கு தோப்பனார் பிரபல்யம் இல்ல! கரண்டி உத்யோகம்தான்..

நேக்கும் படிப்பு அவ்வளவா வல்ல! கஷ்ட ஜீவனம்தான்...”  “அடாடா! படிப்பு வல்லன்னா என்னடா.. அந்த பவ்யம் பணிவு எல்லாருக்கும் வருமா? இப்பவும் இங்க அலையுதுகளே.. பாத்தீல்ல! எல்லாம் பகவான் அனுக்கிரஹம்.. இப்ப மாமாகிட்ட நோக்கு எதுனா ஆக வேண்டியிருக்கா.. கும்மாணம்னு வேற சொல்ற! எங்க ஜாகை? “இங்கயேதான் மாமா..

போஸ்டல் காலனில ஒரு போர்ஷன்ல இருக்கேன்! வீடு வாடகைக்கு பிடிச்சி தர்றது, மனை தரகுன்னு ஏதோ வருமானம் வந்துண்டு இருக்கு! மெட்றாஸ்ல பொழைக்கறது கஷ்டமே இல்ல மாமா! என்னா ஒண்ணு... எதப்பாத்தும் ஆசைப்படக்கூடாது.. பீச்சு சினிமா ஹோட்டல் துணிமணி அது இதுன்னு ஆசப்பட்டுட்டோம்...

அவ்வளவுதான்! மனுஷன் வேதனைப்பட்டே சாக வேண்டியதுதான்! “ஆஹா.. ஆஹா.. நீ சொன்னது சாதாரண வாக்குல்லடா அம்பீ.. அதான் பிரம்ம சூத்ரமாக்கும்.. படிக்கலேன்னா என்ன! ஞானம் பிரவாகமா வழியறதுடா அம்பீ! அப்றம் கேட்டதுக்கு நீ எதுவும் சொல்லலியேடா!” “ வேற ஒண்ணும் இல்ல மாமா! நான் ஒண்ணும் பரம யோக்கியன் இல்லி யாக்கும்...

கொஞ்சம் பொய் அப்பப்ப சொல்லுவேன் மாமா?”  “பேஷ் !,பேஷ் இத ஒத்துக்கறதே பெரிய சத்ய சந்தனுக்கு சமம்டா அம்பீ! யார்தான் பொய் சொல்றது இல்ல!” “அப்றம் எனக்கு நம்ம தர்மத்துல ரொம்ப ஈடுபாடு உண்டு.. சனாதன வெறியன்னா பாத்துக்கங்களேன்!” “ அடாடா! ரொம்ப சிரேஷ்டமாச்சே அது!” “நம்ப இந்து தர்மத்துல ரொம்ப மூழ்கிட்டதால மித்த மதக்காராளை பாத்தா பிடிக்கறதே இல்ல மாமா”

“அப்படித்தான்டா நெருப்பாட்டம் எரியணும்.. ஜாஜ்வல்யம் நன்னா ஜொலிக்கறதே”  “ஃப்ராடு பண்றவாள பாத்தா ரொம்ப புடிக்கும்ணா! அவாளைத்தான் சுத்தி வச்சிண்டிருக்கேன்!” “சரி விடு! சுத்த தங்கமாட்டமாடா இருக்க முடியும்..

ஏதோ ஒவ்வொத்தருக்கு ஒவ்வொரு கொறை!” “கொஞ்சம் டிராமா அது இதுன்னு ஒரு சபலம் இருக்கறதால அப்பப்ப நெறய வேஷம் கட்றதுண்டு மாமா!” “சரியா போச்சு போ! நம்மவாளுக்கே அந்த வீக்னஸ் உண்டே! அதுல என்ன தப்பு இருக்க போறது” “என்னோட கையாலதனத்தை என்னால ஏத்துக்க முடியாது மாமா! என்கஷ்டத்துக்கெல்லாம் தோப்பனார்தான் காரணம்னு எல்லார்ட்டயும் சொல்றது உண்டு!” “தப்பாச்சேடா அது!” “அப்றம் மாமா! நான் படிக்கலேன்னு சொன்னேன்ல..

ஆனா படிச்ச மாதிரி எம்ஏ பட்டம் டூப்ளிகேட்டா வாங்கி வச்சிருக்கேன் மாமா” “கருமம் இது வேறயா? அது சரி.. எதுக்கு இப்ப என்னுகிட்ட இந்த எழவெடுத்த கதையெல்லாம் சொல்லிகிட்டிருக்கே!” “வேற ஒண்ணும் இல்ல மாமா! நேத்து நீங்க பார்க்ல எல்லார்கிட்டயும் பேசிகிட்டு இருக்கும்போது ரொம்ப ஆக்ரோஷமா “மோடிய விட்டா இந்த நாட்டை ஆள்றதுக்கு அவருக்கு ஈக்குவலா வேற யாரு இருக்கா”ன்னு பேசிகிட்டிருந்ததை கேட்டுகிட்டு இருந்தேன் மாமா!

அப்பவே என்ன பத்தி சொல்லணும்னு நெனச்சேன்! சந்தர்ப்பம் சரியா வல்ல! அதான் ஒங்க காதுல என்ன பத்தி ரெண்டு வார்த்தை போட்டு வச்சிட்டு போலாம்ணு...” “அட நன்னாரி பயலே!...”